இரட்டைக்கிளவி
இரட்டைக்கிளவி ( இரட்டை மொழி)
ஓரு சொல் இரண்டு முறை தொடர்ந்து வந்து பொருள் தருமிடத்து அது இரட்டைக்கிளவி எனப்படும்.
'' இரட்டைக் கிளவி யிரட்டிற்பிரிந் திசையா '' - தமிழ் இலக்கிய நூலான நன்னூலில் காணப்படும் சூத்திரம்
அதாவது ஓர் சொல் இருமுறை தொடர்ந்து வந்து உணர்த்தும் பொருளை அதே சொற்கள் பிரிந்து நிற்கும் போது தருவதில்லை .
சில இரட்டைமொழிகள் இசை (ஓசை) பற்றிய பொருள் உணர்த்துவதாக அமையும் .
எடுத்துக்காட்டு - கடகட , சலசல
சில இரட்டைமொழிகள் பண்பு பற்றிய பொருள் உணர்த்துவதாக அமையும் .
எடுத்துக்காட்டு - மொறுமொறு , முணுமுணு , கசகச , பரபர
இரட்டைக்கிளவியின் விளக்கத்தினை தரும் தமிழ் திரைப்பட பாடல் வரி :-
“சலசல சலசல இரட்டைக் கிளவி தகதக தகதக இரட்டைக் கிளவி
உண்டல்லோ தமிழில் உண்டல்லோ
பிரித்து வைத்தல் நியாயம் இல்லை பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை
இரண்டல்லோ இரண்டும் ஒன்றல்லோ”
எடுத்துக்காட்டுகள் -
“கலகல ,கூஉந்துணை யல்லால் ”- நாலடியார்
“ குறுகுறு நடந்துஞ் சிறுகை நீட்டியும்” - புறநானூறு
“அண்ட கோளகை வெடிபட இடிபட
எண்டி சாமுக மடமட நடமிடும்
அந்த மோகர மயிலினி லியலுடன் .” - திருப்புகழ்
'' வளையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது குளு குளு
தென்றல் காற்றும் வீசுது , சில நேரம் சிலு சிலு சிலு என
சிறு விரல் பட பட துடிக்குது எங்கும் தேகம் கூசுது
சின்ன பெண் பெ ண்ணல்ல வண்ண பூந்தோட்டம் '' - என்ற திரைப்பட பாடல் வரிகள் .
குறிப்பு- இலக்கியச் சான்றுகளை காட்டிலும் திரைப்பட பாடல்கள் மூலம் சிலருக்கு எளிதில் இந்த இலக்கணப்பகுதியை மனனம் செய்யக்கூடியதாக இருக்கும் என்ற நோக்கத்திலே இங்கு திரைப்பட பாடல் வரிகள் எடுத்துக்காட்டுகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.