Serlo Logo அனைவருக்கும் திறந்த உரிமம் உள்ள ஓர் இணையத்தளம்

கண்டி இராசதானியை ஆக்கிரமித்தல்

கி.பி. 1762 ஆம் ஆண்டளவில் கண்டி இராசதானிக்கும் ஒல்லாந்தருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. இதனால் ஒல்லாந்தருக்கு எதிராக வேறொரு இனத்தவரின் உதவியைப் பெறுவதில் மன்னன் ஆர்வம் காட்டினான்.

இதன் விளைவாக 1762 ஆம் ஆண்டு ஜோன் பைபஸ் என்ற ஆங்கிலேயன் கண்டி இராசதானிக்குத் தூதுவனாக வந்தான்.  இதனால் அச்சமடைந்த ஒல்லாந்த ஆளுநர் தமது படைகளை அனுப்பி கண்டியை ஆக்கிரமித்தனர் . எனினும் ஒல்லாந்தரால் கண்டியை கைப்பற்ற முடியவில்லை.

மீண்டும் 1765 ஆம் ஆண்டு ஒல்லாந்தரால் கண்டி இராசதானி ஆக்கிரமிக்கப்பட்டது. ஒல்லாந்தர் கண்டி நகரை அடைந்ததால், மன்னன் பாதுகாப்பிற்காக ஹங்குரன்கெத்த என்ற இடத்திற்குத் தப்பிச் சென்றான். அதே சமயம் மழைக்காலம் தொடங்கியதும் நோய்களால் பாதிக்கப்பட்டும் கண்டி மக்களின் தாக்குதலாலும் ஒல்லாந்தர் மீண்டும் திரும்பிச் சென்றனர்.

பல ஆண்டுகள் தொடர்ந்து ஏற்பட்ட மோதல்கள் காரணமாக சமாதானத்தை ஏற்படுத்த மன்னன் விரும்பினான்.

அதற்கமைய கி.பி.1766 ஆம் ஆண்டு  ஒரு உடன்படிக்கையில் அவன் கைச்சாத்திட்டான். அந்த உடன்படிக்கையின் சில முக்கிய உறுப்புரைகளாக " யாழ்ப்பாணம் , மன்னார் , கற்பிட்டி, கொழும்பு , காலி , திருகோணமலையைச் சூழவுள்ள பிரதேசங்கள் என்பன ஒல்லாந்தருக்கு உரித்தாகும். கரையோரம் தொடக்கம் நாட்டின் உட்பகுதியில் ஒரு கவ்வை (6 km ) அளவு நிலம் ஒல்லாந்தருக்கு உரித்தாகும் போன்றன அமைந்திருந்தது .

அதன் பின்னர் 1796 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் இலங்கைக்கு வந்ததுடன் ஒல்லாந்தரைத் தாக்கி அவர்களுக்கு உரிய பிரதேசங்களைத் தமதாக்கிக் கொண்டதுடன் அவர்களது ஆட்சி முடிவுற்றது.


This content is licensed under
CC BY-SA 4.0 What does that mean? serlo.org