இலங்கையின் கரையோரப் பிரதேச ஆட்சி
இரண்டாம் இராசசிங்கன் மன்னன் தனது ஆட்சி காலத்தில் போர்த்துக்கேயரை இலங்கையில் இருந்து வெளியேற்ற உறுதியுடன் செயற்பட்டான். இதற்காக பலம்வாய்ந்த கடற்படையைக் கொண்ட ஒல்லாந்தரின் துணையை நாடி பேச்சுவார்த்தை நடாத்தினான். போர்த்துக்கேயரை வெளியேற்றுவதற்குத் தமக்கு வழங்கும் உதவிக்குக் கைமாறாகக் கறுவா வர்த்தகத்தின் உரிமையையும் கிழக்குக் கடற்கரையில் ஒரு துறைமுகத்தையும் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்தான்.
1638 ஆம் ஆண்டு வைகாசி மாதம் மன்னனின் படையும் ஒல்லாந்தரும் இணைந்து மட்டக்களப்பில் போர்த்துக்கேயரது கோட்டையைத் தாக்கி வெற்றியடைந்தனர். அதன் பின்னர் 1638 ஆம் ஆண்டு மன்னன் ஒல்லாந்தருடன் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டான். அந்த உடன்படிக்கையின் முக்கிய விடயங்களாக போர்த்துக்கேயரை இலங்கையிலிருந்து முற்றாக வெளியேற்றுவதற்கு கண்டி மன்னனுக்கு உதவுதல், போர்த்துக்கேயரிடமிருந்து கைப்பற்றப்படும் கோட்டைகளில் மன்னன் விரும்பினால் ஒல்லாந்தரது படையை நிறுத்துவதற்கு உடன்படல் மற்றும் ஒல்லாந்தர்கள் வர்த்தக் நடவடிக்கைகளில் சுதந்திரமாக ஈடுபடுதல் என்பன அடங்கியிருந்தது.
அதற்கமைய 20 ஆண்டுகளாக தாக்குதல்கள் நடாத்தி இறுதியில் 1658 ஆம் ஆண்டு ஒல்லாந்தர் மன்னாரையும் அதன் பின்னர் யாழ்ப்பாணக் கோட்டையையும் கைப்பற்றியதுடன் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களில் அதுவரை நிலவிய போர்த்துக்கேயரது ஆட்சி முடிவுக்கு வந்தது.
Loading